ஜூலை 30, 2010 வாகரை கதிரவெளிப் பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்ட அம்மன் சிலை தொடர்பான வரலாற்று ஆய்வுகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தச் சிலை இராசதானிகளுக்கு முற்பட்ட காலத்திற்குரியதாக இருக்கலாமெனக் கருதப்படுகிறது
இதேவேளை அம்மன் சிலை தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கதிரவெளி வெருகம்புல எனப்படும் மலைகள் மற்றும் வயல் சூழ்ந்த பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது.
முடி தொடக்கம் கழுத்து வரையிலான சுமார் முக்கால் அடி உயரமான இந்த அம்மன் சிலை ஐம்பொன்னால் செய்யப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
நீதிமன்றத் தீர்ப்புக்கு அமைய அம்மன் சிலை தற்போது கதிரவெளி காளி கோயில் நிர்வாக சபையிடம் ஒப்படைக்கப்பட்டுக் கோயில் மூலஸ்தானத்தில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 10 இலட்சம் ரூபா பிணையில் இந்தச் சிலை இவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணைகள் முடியும்வரை இதனைப் பார்வையிட மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சிலை பௌத்த வழிபாட்டுடன் சம்பந்தப்பட்டதாக இருக்கலாமென தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களினால் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த வழக்கு விசாரணையின்போது அது திராவிட வழிபாட்டுடன் தொடர்புடையதென காளி கோயில் நிர்வாகத்தினர் நிரூபிக்கவேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த அம்மன் சிலையோடு கருங்கல்லால் செய்யப்பட்ட வேறு சில பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் இருப்பினும் அவை அடையாளம் காணமுடியாதபடி சிதைவடைந்துள்ளதாகவும் வாகரைப் பிரதேசச் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.













