ஜூலை 30, 2010 புலம்பெயர் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் சகோதர மக்களின் நலன் கருதி அபிவிருத்தி வலயமொன்றை உருவாக்குவதற்கு ஆதரவு வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல தெரிவிக்கின்றார்.
குமரன் பத்மநாதன் என்றழைக்கப்படும் கே. பீ யும் அவர்களில் அடங்குவதாக அமைச்சரவைத் தீர்மானங்களை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் நேற்று தெரிவித்தார்.
புலம்பெயர் தமிழர்கள் எல். ரி . ரி. ஈ. யினருக்கு சார்பாக அல்லது பயங்கரவாதத்திற்கு சார்பாகச் செயற்படுவோர் என்றே பலரும் நினைப்பதாகத் தெரிவித்த அமைச்சர், அது உண்மை அல்ல எனவும் கூறினார்.
அவர்களில் பெரும்பாலானவர்கள் சகோதர மக்களின் நலன் கருதி அபிவிருத்தி வலயமொன்றை உருவாக்குவதற்கு முன்வந்துள்ளனர் என்றும் அந்த இணக்கப்பாட்டில் கே.பி போன்ற ஒருவரும் தொடர்புபட்டுள்ளதாகவும் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் பேசிய அமைச்சர் அழிவுப்பாதைக்கான அந்த சக்தியை அபிவிருத்திக்கான சக்தியாக மாற்றவே அரசாங்கம் என்ற வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறினார்.
ஒருவரை அரசாங்கத்தின் சாட்சியாளராகப் பயன்படுத்துவதுடன் அதன் பின்னர் அவருக்கு மன்னிப்பு வழங்க இடமுள்ளது எனவும் தெரிவித்த அமைச்சர், கே.பி அதற்கு உடன்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.













