ஜூலை 30, 2010 மன்னார் பகுதியில் நுகர்வோர் சட்டங்களை மீறிய 48 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சு தெரிவிக்கின்றது.
இந்த மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது குறித்த வர்த்தகர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக விலைக்குப் பொருட்களை விற்பனை செய்தமை, பொருட்களின் விலைகளைக் காட்சிப்படுத்தாமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வவுனியா, அம்பாறை, மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் விரிவான முறையில் சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.













