ஜூலை 29, 2010 பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் அரசியலமைப்பை மீறும் வகையில் செயற்பட்டதாகப் பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கம் குற்றம் சாட்டுகிறது.
நேற்று முன்தினம் நடைபெற்ற அடையாளப் பணிப் பகிஷ்கரிப்பில் பங்குபற்றிய விரிவுரையாளர்களின் ஒருநாள் சம்பளத்தை வெட்டுமாறு சுற்றறிக்கையொன்றை விநியோகித்துள்ளதன் மூலம் அது தெளிவாகியுள்ளதாகப் பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கத் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க கூறினார்.
இது கேலிக்குரிய ஒரு விடயமாகுமெனக் குறிப்பிட்ட அவர் ஆணைக்குழு கடந்த நான்கைந்து வருடங்களாக இவ்வாறே செயற்பட்டு வந்துள்ளதெனத் தெரிவித்தார்.
மானியங்கள் ஆணைக்குழு இதற்கு முன்னர் வெளியிட்ட சுற்றறிக்கைகளும் பிழையானவையென விரிவுரையாளர் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டார்.
அந்தச் சுற்றறிக்கைகளில் மொழி மற்றும் பொருள் என்பவையும் தவறாகவே காணப்பட்டதாகவும் குரோத மனப்பான்மையுடைய சுற்றறிக்கைகளே வெளியிடப்பட்டதாகவும் பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கத் தலைவர் கூறினார்.
இதற்கு முன்னர் உரிய சம்பளத்தை வழங்காமலும் தற்போது சம்பளமின்றியும் இந்த அரசாங்கம் தங்களிடம் வேலை வாங்குவதாகக் குறிப்பிட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கத் தலைவர், அரசாங்கம் எதனை நோக்கிச் செல்கிறதெனக் கேள்வியெழுப்பினார்.
இது தொடர்பாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் காமினி சமரநாயக்கவிடம் வினவியபோது பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கத்தினால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கவேண்டிய அவசியம் தமக்கில்லையென்றார்.













