ஜூலை 29, 2010 யாழ் வேலணை வைத்தியசாலையின் குடும்ப நல மருத்துவ சேவை விடுதிக்குள் மர்மமான முறையில் உயிரிழந்ததாகக் கூறப்படும் குடும்ப நலத் தாதியின் சடலம் கைதடி ஏத்தாளை மயானத்திலிந்து நேற்றுப் பகல் தோண்டியெடுக்கப்பட்டது.
கடந்த 10 ஆம் திகதி உயிரிழந்த இந்தக் குடும்பநல மருத்துவத் தாதியின் மரணம் குறித்து உறவினர்கள் சந்தேகம் எழுப்புவதாக ஊர்காவற்றுறை நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டது.
இதனைக் கருத்திற் கொண்ட நீதிமன்றம் சடலத்தை நேற்றைய தினம் தோண்டியெடுப்பதற்குத் திகதி நிர்ணயித்தது.
இதற்கமைய ஊர்காவற்றுறை நீதவான் மற்றும் யாழ் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் முன்னிலையில் தோண்டியெடுக்கப்பட்ட சடலம் மேலதிக விசாரணைக்காகக் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த மரணம் தொடர்பாக எழுந்துள்ள சந்தேகங்கள் குறித்து ஊர்காவற்றுறை பொலிஸார், வைத்தியசாலையின் டொக்டர் ஒருவர் உட்பட சுமார் 20 பேரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.
கடந்த 10 ஆம் திகதி காலை கடமைக்காகச் சென்ற குறித்த குடும்பநல மருத்துவத் தாதியின் சடலம் அன்றைய தினம் காலை 7 மணிக்கும் 8 மணிக்கும் இடையில் விடுதிக்குள் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் மீட்கப்பட்டது.













