ஜூலை 27, 2010 நாடு முழுவதுமுள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று அடையாளப் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடுகின்றனர்.
இந்த அடையாளப் பணிப் பகிஷ்கரிப்பைத் தொடர்ந்து முன்னெடுப்பதா என்பது குறித்து இன்றைய தினம் பகல் வேளையில் ஊடகங்களைத் தெளிவுபடுத்த எண்ணியுள்ளதாகப் பல்கலைக்கழக விரிவுரையாளர் சம்மேளனத்தின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.
தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் இன்றைய தினம் அடையாளப் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் சம்மேளனம் ஏகமனதாகத் தீர்மானித்ததென அவர் சொன்னார்.
அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற முடியாமல் போயுள்ளதன் காரணமாக அனைத்துப் பல்கலைக்கழகங்களும் இன்றைய தினம் அடையாளப் பணிப் பகிஷ்கரிப்பை மேற்கொள்ள ஆதரவு வழங்கியுள்ளதாகப் பேராசிரியர் சம்பத் அமரதுங்க கூறினார்.
குறிப்பாக விரிவுரையாளர்களின் நீண்டகாலச் சம்பளப் பிரச்சனை தொடர்பாக அரசாங்கம் எழுத்துமூலமாக உறுதிமொழி வழங்கியிருந்ததென அவர் சுட்டிக்காட்டினார்.
இன்று பிற்பகல் 2.30 அளவில் இடம்பெறும் செய்தியாளர் சந்திப்பின்போது தமது நிலைப்பாடு தொடர்பாகத் தெளிவுபடுத்தவுள்ளதாக விரிவுரையாளர் சம்மேளனத் தலைவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் வினவியபோது, இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை பண்பற்ற ஒரு நடவடிக்கையென ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் காமினி சமரநாயக்க பதிலளித்தார்.













