ஜூன் 22, 2010 இடம்பெயர்ந்த 449 பேர் நேற்று ஒட்டுசுட்டான் பகுதியில் மீள்குடியேற்றப்பட்டதுடன் மேலும் நாளை மறுதினம் 350 பேரை மீள்குடியேற்றத் திட்டமிட்டுள்ளதாகத் திட்டப் பணிப்பாளர் தெரிவித்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் கூறுகிறது.
வவுனியா மெனிக்பாம் நலன்புரி முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 136 குடும்பங்களைச் சேர்ந்த 449 பேர் நேற்று தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட்டதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் அறிவித்தது.
ஒட்டு சுட்டான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பனிக்கன்குளம் மற்றும் அம்பகாமம் பிரதேச செயலகப் பிரிவுகளில் இவர்கள் மீள்குடியேற்றப்பட்டதாக முல்லைத்தீவு மாவட்டத் திட்டப் பணிப்பாளர் கூறினார்.
இதேவேளை எதிர்வரும் 24ம் திகதி சுமார் 350 பேர் மாங்குளம் பனிக்கன்குளம் மற்றும் ஏ-9 வீதியின் மேற்கே திருமுறிகண்டி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் மீள்குடியேற்றப்பட உள்ளதாகவும் அச்செய்தி கூறுகிறது.













